Home Sports & Leisure18ஆவது வருடமாக இடம்பெறும் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிறீமா ஶ்ரீ லங்கா யூத் லீக் 2025

18ஆவது வருடமாக இடம்பெறும் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிறீமா ஶ்ரீ லங்கா யூத் லீக் 2025

by CeylonBusiness1
November 18, 2025 1:59 pm/**/ 0 comment

தொடர்ச்சியாக 18ஆவது வருடமாக, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான 2025 ஶ்ரீ லங்கா யூத் லீக் (Sri Lanka Youth League – SLYL) இற்கு அனுசரணை வழங்குவதற்காக Ceylon Agro Industries Ltd (Prima Group Sri Lanka) பிறீமா நிறுவனம் இலங்கை கிரிக்கெட் சபையுடன் மீண்டும் கூட்டு சேர்ந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய பாதை திட்டத்தின் (National Pathway Program) கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் தொடரானது, வீரர்கள் தேசிய அரங்கிற்குச் செல்வதற்கு ஒரு தேசிய அளவிலான மேடையை வழங்குவதோடு, அவர்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கும் உதவுகிறது.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, தம்புள்ளை, காலி, கண்டி உள்ளிட்ட ஐந்து பெரும் மாகாணங்களை கொண்ட இந்த 50 ஓவர் போட்டித் தொடரானது, 2025 நவம்பர் 19 – 28 வரை கொழும்பில் உள்ள ஐந்து மைதானங்களில் இடம்பெறவுள்ளது. இதன் அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 26 ஆம் திகதியும், இறுதிப் போட்டி நவம்பர் 28 ஆம் திகதியும் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

இது பற்றி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஸ்லி டி சில்வா தெரிவிக்கையில், “வயது அடிப்படையிலான கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை, ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், எதிர்காலத்திற்கான வீரர்களைக் கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்பதற்குத் தேவையான சரியான மேடையை இது வழங்குகிறது. அத்துடன், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிறீமா ஶ்ரீ லங்கா யூத் லீக் தொடரானது அந்தச் செயற்பாட்டில் ஒரு முக்கிய பங்கை வகித்து வருகின்றது.” என்றார்.

banner

பிறீமா ஶ்ரீ லங்கா இளையோர் லீக் மூலம் பல இளம் வீரர்கள் உருவாகி, தேசிய வீரர்களாக நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை இலங்கை கண்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல், Prima Group Sri Lanka நிறுவனம் பிறீமா 15 வயதுக்குட்பட்டோருக்கான ஶ்ரீ லங்கா யூத் லீக் தொடரின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக பெருமையுடன் சேவையாற்றி வருகிறது.

சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ், பிறிமா குழுமம் ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் பொது முகாமையாளர் சஜித் குணரத்ன தெரிவிக்கையில், “பிறீமா யூத் லீக் போட்டித் தொடரானது, நாட்டில் அடிப்படை மட்டத்திலிருந்து கிரிக்கெட்டை வளர்ப்பதற்கான எமது நீண்ட அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. சுமார் இரண்டு தசாப்தங்களாக, இளம் வீரர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க, நாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம். அவர்களில் பலர் படிப்படியாக முன்னேறி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை காணக் கிடைத்துள்ளமை மிகப்பெரிய திருப்தியை அளிக்கிறது.” என்றார்.

இது குறித்து இலங்கை அணியின் ரி20 மற்றும் ஒரு நாள் அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவிக்கையில், “நான் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிறீமா ஶ்ரீ லங்கா யூத் லீக்கின் 2011 மற்றும் 2012 தொடர்களில் பங்கேற்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தேன். அது அந்த நேரத்தில் எமக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது. இந்த வருடம் பங்கேற்கும் இளம் வீரர்களுக்கும் அது அவ்வாறே இருக்கும் என நான் நம்புகிறேன்.” என்றார்.

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுப் பதிப்புகளில் பங்கேற்ற கமிந்து மெண்டிஸ், தனது ஆரம்பகால கிரிக்கெட் பயணத்தை வடிவமைத்துக் கொள்வதில் இந்தத் தொடர் ஒரு முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார்.

2013 ஆம் ஆண்டுப் பதிப்பில் இந்தத் தொடரில் விளையாடிய தனது நினைவுகளை மீட்ட இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க, இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இந்தத் தொடர் ஒரு மதிப்புமிக்க தளமாக தொடர்ச்சியாக சேவையாற்றும் என நம்புவதாக தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

பிறீமா  15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஶ்ரீ லங்கா யூத் லீக் 2025 தொடரானது நாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இளையோர் கிரிக்கெட் நிகழ்வுகளில் ஒன்றாக திகழ்கின்றது. இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், தமக்கான அங்கீகாரத்தைப் பெறவும் இது ஒரு பெறுமதி வாய்ந்த தளத்தை வழங்குகின்றது.

You may also like

Leave a Comment