இலங்கையின் மிக மதிப்பிற்குரிய இளையோர் கோல்ப் போட்டித் தொடரான ‘பிறீமா சன்ரைஸ் ஸ்ரீ லங்கா ஜூனியர் ஓபன் கோல்ப் சம்பியன்ஷிப் 2025’ தொடரானது, நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்ற இளம் கோல்ப் வீர, வீராங்கனைகளின் அபார திறமை மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தியவாறு மிக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
பிரபலமான இந்த போட்டித் தொடரானது, 2026 மார்ச் 06 – 08 வரை நுவரெலியா கோல்ப் கிளப்பில் (NEGC), சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பிறீமா குறூப் ஸ்ரீ லங்கா, இலங்கை கோல்ப் சங்கம் மற்றும் ஸ்ரீ லங்கா கோல்ப் யூனியனின் இளையோர் மேம்பாட்டுக் குழு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 17ஆவது வருடமாக தொடர்ச்சியாக நடைபெற்றது.
இளையோர் கோல்ப் விளையாட்டில் உலக அமெச்சூர் கோல்ப் தரவரிசைக்கான (World Amateur Golf Rankings – WAGR) ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வாகக் கருதப்படும் இத்தொடர், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வளர்ந்து வரும் திறமையாளர்களை வெளிப்படுத்துவதுடன், இளம் வீரர்களின் பிரிவுகளில் தேசிய ஜூனியர் சம்பியன்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இப்போட்டியின் ‘கோல்ட்’ பிரிவில் (Gold Division) ரேஷன் அல்கம ஆண்களுக்கான ஒட்டுமொத்த பிரிவின் வெற்றியாளராக தெரிவானதுடன், இந்தியாவின் அசாரா சாஹ்னி (Asara Sawhney) பெண்களுக்கான ஒட்டுமொத்த பிரிவின் வெற்றியாளர் பட்டத்தைச் சூடினார். ஏனைய பிரிவுகளிலும் வீரர்கள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். ‘சில்வர்’ பிரிவில் ஆண்களுக்கான பட்டத்தை உதீர ரஷ்வித பண்டாரவும், பெண்களுக்கான பட்டத்தை விஹாரா திசரணி ஹேரத்தும் வென்றனர்.
‘புரோன்ஸ்’ பிரிவில் (Bronze Division) ஆண்களுக்கான பட்டத்தை ஜேடன் சதாசிவம் வென்றதுடன், பெண்களுக்கான பட்டத்தை முஸம்மில் முஷ்பிரா தனதாக்கிக் கொண்டார். ‘கொப்பர்’ பிரிவில் (Copper Division) அபிமன் அபேவர்தன ஆண்களுக்கான பிரிவின் முதலிடத்தை பிடித்ததுடன், பிரதீப் ஹக்ஷரா பெண்களுக்கான பிரிவில் வெற்றியைப் பதிவு செய்தார்.
இப்போட்டித் தொடரில் சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் பிறீமா குறூப் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பங்களிப்பானது, இலங்கையின் இளையோர் கோல்ப் துறையை வடிவமைப்பதில் நிறுவனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இந்த சம்பியன்ஷிப் தொடரானது இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த ஒரு போட்டித்தன்மை வாய்ந்த தளத்தை வழங்குவதுடன், நாட்டில் கோல்ப் விளையாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதில் நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
