Home Marketingநிலைபேற்றியலின் மூலம் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்: ருவன்வெலிசாய தூய்மைப்பணியை Eco Spindles மற்றும் Gunadamin Elephant House ஆகியன முன்னின்று நடத்துகின்றன

நிலைபேற்றியலின் மூலம் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்: ருவன்வெலிசாய தூய்மைப்பணியை Eco Spindles மற்றும் Gunadamin Elephant House ஆகியன முன்னின்று நடத்துகின்றன

by CeylonBusiness1
July 24, 2026 1:01 pm/**/ 0 comment

பொசன் பௌர்ணமி தினத்தைத் தொடர்ந்து வரும் காலத்தை, Eco Spindles (Pvt) Ltd மற்றும் Gunadamin Elephant House ஆகியவை அர்த்தமுள்ள சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுடன் அனுட்டித்துள்ளன. புனிதமான ருவன்வெலிசாய வளாகத்தைப் பாதுகாப்பதற்காக ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூகப் பங்காளர்களை ஒன்றிணைத்ததோடு, வீசப்படும் பிளாஸ்திக்கை எவ்வாறு மதிப்புமிக்க வளங்களாக மாற்றலாம் என்பதையும் அவை காண்பித்துள்ளன.

பொசன் பௌர்ணமி தினத்தைத் தொடர்ந்து வரும் நாளான, 2026 ஜூன் 30 அன்று அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட இந்த நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்பில், Eco Spindles மற்றும் Elephant House ஆகிய நிறுவனங்களின் 20 ஊழியர்கள் உட்பட 60 தன்னார்வலர்களும், திலகா சுற்றுச்சூழல் மையம் மற்றும் உள்ளூர் சமூகங்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்தனர். இலங்கையின் கலாச்சார மற்றும் மத பாரம்பரியத் தளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து யாத்திரிகர்கள் மற்றும் பார்வையிட வருகை தருகின்றவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பொறுப்பான முறையில் கழிவுகளைச் சேகரித்தல், தரம் பிரித்தல் மற்றும் மீள்சுழற்சி செய்தல் ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்தியது.

தூய்மைப் பணியின் போது சுமார் 350 கிலோகிராம் எடையுள்ள வீசப்பட்ட பிளாஸ்திக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டன. மீட்கப்பட்ட போத்தல்கள் Eco Spindles நிறுவனத்தால் பதப்படுத்தப்பட்டு, இழைகள் (monofilament) மற்றும் நூலாக மாற்றப்படும். இதன் மூலம், பிளாஸ்திக் கழிவுகளைப் பயனுள்ள பொருட்களாக மாற்றி, சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.

banner

Eco Spindles நிறுவனத்தின் மீள்சுழற்சிப் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரஷாந்த மாலிம்படகே கூறுகையில், “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், நமது தேசத்திற்கு ஆழ்ந்த கலாச்சார மற்றும் ஆன்மீக மதிப்பைக் கொண்டுள்ள இடங்களைப் பாதுகாப்பதும் ஒன்றுடனொன்று கைகோர்த்துச் செல்ல வேண்டும். பொறுப்பான கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி ஆகியவை நீடித்த சுற்றுச்சூழல் மதிப்பை உருவாக்குவதோடு, சுழற்சிப் பொருளாதாரத்தில் சமூகங்களைச் காத்திரமான பங்கேற்பாளர்களாக மாற ஊக்குவிக்கும் என்பதை இந்த முயற்சி நிரூபிக்கிறது.”

Elephant House நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி தில்ஷானி எதிரிசிங்க அவர்கள் கூறுகையில், “ஒரு பொறுப்பான நிறுவனமாக, எமது செயல்பாடுகள் எதிர்கால சந்ததியினருக்காக சமூகத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதே எங்கள் தொலைநோக்கு. Eco Spindles, தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், ஒரு முக்கியமான தேசிய பாரம்பரிய தளத்தைப் பாதுகாப்பதற்குப் பங்களித்ததோடு, அங்கு வருகை தருபவர்களிடையே பொறுப்பான நடத்தையை ஊக்குவிக்கவும் எங்களால் முடிந்தது.”

You may also like

Leave a Comment