சிறுவர்கள் மத்தியில் சுகாதாரமற்ற, அதிக சீனி கொண்ட உணவுகள் மற்றும் நொறுக்குத்தீனிகள் உண்ணும் பழக்கங்கள் காணப்படுவதற்கான முக்கிய காரணங்களில், முறையாக கண்காணிக்கப்படாத பாடசாலை உணவகங்களும் உள்ளடங்குவதாக, வயம்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து வேர்ல்ட் விஷன் லங்கா (World Vision Lanka) அமைப்பினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை ஆய்வொன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், பாடசாலை உணவகங்களைத் தவிர, பொருளாதார கஷ்டநிலை காரணமாக உரிய வேளைக்கு உணவு கிடைக்காமை, போஷாக்கு பற்றிய விழிப்புணர்வு மற்றும் போதிய அறிவின்மை, குறைபாடுகளைக் கொண்ட பாடசாலை உணவு விநியோகத் திட்டங்கள் உள்ளிட்டவை சிறுவர்களிடையே போஷாக்கற்ற நிலை உருவாவதற்கான அடிப்படை காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், கலாசார மற்றும் பாலின மேலாதிக்கம், தாய் மற்றும் சேய் சுகாதார சேவைகளில் காணப்படும் குறைபாடுகள் ஆகியனவும் சிறுவர்களிடையே போஷாக்கற்ற நிலை அதிகரிக்கக் காரணமாவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுவர்களின் பசியையும் போஷாக்கற்ற நிலையையும் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் World Vision அமைப்பினால் முன்னெடுக்கப்படும் ‘ENOUGH’ பிரசாரத் திட்டத்தின் ஒரு அங்கமாக, வயம்ப பல்கலைக்கழகத்தின் கால்நடை, மீன்பிடி மற்றும் போசணை பீடத்தின் போசணை மற்றும் உணவுமுறை பிரிவுடன் இணைந்து, வாகரை (மட்டக்களப்பு மாவட்டம்), கற்பிட்டி (புத்தளம் மாவட்டம்), பிபிலை (மொணராகலை மாவட்டம்), வட்டவளை (நுவரெலியா மாவட்டம்), சாவகச்சேரி (யாழ்ப்பாணம் மாவட்டம்), ரிதிகம (குருணாகல் மாவட்டம்), வத்தளை (கம்பஹா மாவட்டம்) ஆகிய பகுதிகளில் இந்த விரிவான அடிப்படை மதிப்பீட்டு ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் தந்தைகள், தாய்மார், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சிறுவர்கள் குறிப்பாக அவர்கள் எதிர்நோக்கும் உணவுப் போஷாக்கு தொடர்பான சவால்கள் தொடர்பில் அவர்களிடமே கேட்டறியப்பட்டு தொகுக்கப்பட்டன.
இந்த ஆய்வு அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கருத்து தெரிவித்த, வயம்ப பல்கலைக்கழகத்தின் போசாக்கு மற்றும் உணவுமுறை பிரிவின் பேராசிரியர் ரேணுக சில்வா, “இலங்கை தற்போது இரு மடங்கு போஷணை குறைபாட்டை எதிர்கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
“ஒதுக்குப்புற கிராமங்கள் மற்றும் மலையக சமூகங்களில், உடல் வளர்ச்சி குறைபாடு (stunting) (15-20%) உள்ளிட்ட உயர்ந்த குறைவான போசணை வீத பதிவு மற்றும் மந்தநிலை (wasting) (15%) போன்ற போஷணைக் குறைபாடுகளும் காணப்படுகின்ற நிலையில், நகரங்களில் உடல் பருமன் அதிகரித்து வருவதும் பதிவாகியுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.
அரச அதிகாரிகள், தகவல் அடிப்படையிலான முடிவுகளை எடுக்கும்போது, குறிப்பாக கொள்கைகள் உருவாக்கும் போதும், இவை தொடர்பான தரவுகள் கிடைக்கும் தன்மை மிக முக்கியமானது என்பதை அவர் இங்கு சுட்டிக் காட்டியதோடு, இலங்கையில் உணவுப் போஷாக்கு குறித்த தரவுகள் இல்லாமை குறித்தும் கவலை வெளியிட்டார்.
அவர் இங்கு தெரிவிக்கையில், “எமது மக்கள் எவ்வளவு புரதம், கனியுப்புகளை உட்கொள்கிறார்கள் என்பது இன்று வரை எமக்குத் தெரியாது. தேசிய போஷணை நிலை அல்லது உணவுப் பழக்கம் தொடர்பான கணக்கெடுப்புகள் எதுவும் எம்மிடம் இல்லை. ஏனைய நாடுகளில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் மக்கள் உண்மையில் எதை சாப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்து செயற்படுகிறார்கள். ஆனால் நாம் போதிய தரவுகளின்றி, மக்களுக்கான உணவு வழிகாட்டலை வழங்குகிறோம்.” என்றார்.
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறைமையை வலுப்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், அடிமட்ட சமூக பங்களிப்பை வலுப்படுத்துதல், காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் விவசாயத்தை ஊக்குவித்தல், தனியார் துறை கூட்டுச் செயற்பாடுகளை ஊக்குவித்தல், பரந்தளவிலான மேம்பாட்டுத் திட்டங்களில் சிறுவர்களிடையேயான போசணை இலக்குகளை இணைத்தல் போன்ற பரிந்துரைகளை பேராசிரியர் ரேணுக சில்வா முன்வைத்தார்.
இந்நிகழ்வில் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட World Vision Lanka அமைப்பின் தேசிய பிரசார முகாமையாளர் லாவண்யா சிறிகுமார, “சிறுவர் போஷாக்கு தொடர்பான 95 கொள்கைகள் இன்றுவரை அமுல்படுத்தப்படவில்லை. அத்துடன் 48,100 சிறுவர்கள் போஷாக்கான பாடசாலை உணவுகளை இன்னும் பெறவில்லை. இத்தகைய நிலைகளை மேம்படுத்த 13 முறைமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
இதேவேளை, இந்த அடிப்படை ஆய்வறிக்கையானது, அரச அதிகாரிகள், சமூக மேம்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் மத்தியில் பகிரப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் கொள்கை வகுப்பாளர்கள் இந்த ஆய்வை ஆதாரமாக கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென எதிர்ப்பார்ப்பதோடு, ஏனைய தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சமூகங்களும் இந்த ஆய்வு மூலமான கண்டறிதல்களில் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில், வயம்ப பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர், அரச அதிகாரிகள், தனியார் மற்றும் அரச சாரா நிறுவன பிரதிநிதிகள் மற்றும் World Vision Lanka ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
