இலங்கை தகவல் தொழில்நுட்ப கற்கை நிறுவனம் (Sri Lanka Institute of Information Technology – SLIIT), ஆராய்ச்சி துறையில் தனது மகத்துவத்தை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், Stanford-Elsevier வெளியிட்டுள்ள உலகின் மிகச்சிறந்த 2% விஞ்ஞானிகளுக்கான 2025ம் ஆண்டு தரப்படுத்தலில் அதன் ஆறு கல்வியாளர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதையிட்டு பெருமை கொள்கிறது. இச்சாதனை மைல்கல், அவர்களின் தனிப்பட்ட மகத்துவத்தைப் போற்றிக் கௌரவிப்பது மாத்திரமன்றி, உயர் தர, பெறுபேறுகளை தரும் விஞ்ஞான, பொறியியல், தகவல் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளின் மையமாக SLIIT பரிணமித்து வருவதையும் எடுத்துக்காட்டுகின்றது.
இந்த அங்கீகாரத்தைக் கொண்டாடும் முகமாக, 2025 ஒக்டோபர் 22 அன்று கொழும்பு NH Collection ல் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. SLIIT ன் வளர்ச்சி கண்டு வரும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய கல்வித்துறைப் பேறு ஆகியவற்றைக் காண்பிக்கும் வகையில், இந்த நிகழ்வானது இக்கல்வி நிறுவனத்திற்குப் பெருமை சேர்ப்பிக்கும் ஒரு தருணமாக மாறியுள்ளது. SLIIT ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விளக்கமளிக்கும் நிகழ்வில், கல்விமான்கள், வர்த்தகத் துறை பிரதிநிதிகள், SLIIT பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இச்சாதனையைக் கௌரவிக்கும் வகையில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
Stanford-Elsevier வெளியிட்டுள்ள மிகச்சிறந்த 2% பட்டியலானது, Elsevier ன் Scopus புள்ளி விபரங்களையும், Science-Metrix அறிவியல் வகைப்பாட்டு கட்டமைப்பையும் பயன்படுத்தி திரட்டப்பட்டுள்ளடன், உலகெங்கிலும் கல்வியாளர்கள் தத்தமது துறைகளுக்கு வழங்கியுள்ள கணிசமான பங்களிப்புக்களை இனங்கண்டு, வெளிப்படுத்துகின்றது. ஒரு வருட சாதனைகள் மற்றும் தொழில் வாழ்வில் நீண்ட கால பேறுகள் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு தரப்படுத்தல் தீர்மானிக்கப்படுவதுடன், உலகளாவிய அறிவியல் மேம்பாட்டில் ஆராய்ச்சியாளரின் செல்வாக்கின் விசாலம் மற்றும் நெடுநாள் பலன் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது.
2024 க்கான ஒரு வருட சாதனைப் பட்டியலில், மனிதவியல் மற்றும் அறிவியல் பீடத்தின் பேராசிரியர் சரித ஜெயருக், கணினி பீடத்தின் கலாநிதி பாக்யா நத்தாலி சில்வா, மனிதவியல் மற்றும் அறிவியல் பீடத்தின் பேராசிரியர் தனுஷ்க உதயங்க, பொறியியல் பீடத்தின் பேராசிரியர் துஷ் ஜெயக்கொடி, மற்றும் பொறியியல் பீடத்தின் பேராசிரியர் நிமால் ராஜபக்ச ஆகியோர் SLIIT நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். இப்பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி சார்ந்த நற்சான்றிதழ்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ராஜபக்ச மற்றும் பேராசிரியர் பிரியன் டயஸ் ஆகியோரின் நெடுநாள் பங்களிப்புக்களை அங்கீகரிக்கும் வகையில் நீண்ட தொழில் வாழ்விற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். உலகின் முதல் 1% ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பேராசிரியர் ராஜபக்ச அவர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளமை, உலகளாவில் அவரது நீடித்த செல்வாக்குக்கு சிறந்த சான்றாகும்.
SLIIT ன் வேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் ரத்னாயக்க, மற்றும் துணைவேந்தர் (கல்வி) பேராசிரியர் ராகுல அத்தலகே ஆகியோருடன், ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து பங்குபற்றிய குழு நிலை கலந்துரையாடல் ஒன்றும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது ஒத்துழைப்பு மற்றும் துறைகளுக்கு இடையிலான பணியின் முக்கியத்துவம், மற்றும் அறிவியல் தேடல் மற்றும் புத்தாக்கங்களை முன்னேற்றுவதில் பல்கலைக்கழகங்கள் வகிக்கும் முக்கிய பங்கு ஆகியவை சார்ந்த தமது ஆராய்ச்சிப் பயணங்களை குழுவினர் பிரதிபலித்தனர். வலுவான ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை வளர்த்து, தேசிய முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய சவால்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு காணுகின்ற அறிவைத் தோற்றுவிப்பதை ஊக்குவிப்பதில் SLIIT ன் அர்ப்பணிப்பை இந்நிகழ்வு எடுத்துக் காட்டியுள்ளது.
இச்சாதனை குறித்து SLIIT ன் துணைவேந்தர் பேராசிரியர் லலித் கமகே அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “எமது கல்வியாளர்களின் போற்றத்தக்க திறமை மற்றும் SLIIT ன் ஆராய்ச்சிக் கட்டமைப்பின் வலிமை ஆகியவற்றை இந்த அங்கீகாரம் எடுத்துக்காட்டுகின்றது. உலகளாவிய முக்கியத்துவத்தைச் சுமக்கும் அதேசமயம், உள்நாட்டு மற்றும் பிராந்திய சவால்களுக்கு தீர்வு காணுகின்ற ஆராய்ச்சியை தோற்றுவிப்பதில் எமது கல்வி நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது. எமது கல்வியாளர்களின் உழைப்பு சர்வதேச மேடையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை எமக்கு மிகவும் பெருமையளிப்பதுடன், மகத்துவம், புத்தாக்கம், மற்றும் நற்பேறு ஆகியவற்றின் மீது SLIIT தொடர்ச்சியாகக் காண்பித்து வருகின்ற அக்கறையைப் பிரதிபலிக்கின்றது. இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ஆராய்ச்சியாளர்கள் உண்மையில் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். இச்சாதனை ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டு வருவது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயம் என்பதுடன், பெருமதிப்பு மிக்க இந்த சர்வதேச அங்கீகாரப் பட்டியலில் சேர்ப்பிக்கப்படுகின்ற எமது கல்வியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இது SLIIT ன் சர்வதேச ஆராய்ச்சி நற்சான்றை வலுப்படுத்துவது மாத்திரமன்றி, நற்பலன் தரவல்ல மற்றும் சர்வதேசரீதியாக நன்மதிப்புப் பெற்ற தொழில்களைக் கட்டியெழுப்புவதில் எமது கல்வியாளர்களின் தேர்ச்சியையும் சுட்டிக்காட்டுகின்றது. அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்!”
இச்சாதனைகள் தனிப்பட்ட வெற்றிகளுக்கும் அப்பாற்பட்டவை. புத்தாக்கம், கூட்டு முயற்சி மற்றும் சர்வதேச தெரிநிலை ஆகியவற்றை வலியுறுத்துகின்ற ஒரு ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் SLIIT ன் நிறுவனரீதியான அர்ப்பணிப்பிற்கு அடையாளமாக அவை காணப்படுகின்றன. பல்வேறு துறைகள் மத்தியில் கல்வியாளர்களுக்கு ஆதரவளித்து, உயர்ந்த தரம் கொண்ட ஆராய்ச்சியை வளர்ப்பதனூடாக, இலங்கையிலும், பரந்த பிராந்தியத்திலும் முன்னணி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற தனது நற்சான்றை SLIIT தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றது.
