தென் கொரியாவின் டேஜியோனில் உள்ள Woosong பல்கலைக்கழகத்தின் SolBridge International School of Business கற்கைப்பிரிவால் நடத்தப்பட்ட 2025ம் ஆண்டுக்கான சர்வதேச வணிகத் திட்டப் போட்டியில் (International Business Plan Competition – IBPC) உலகளாவிய வெற்றிக்கிண்ணத்தை SLIIT Business School பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் அணி வென்றதன் மூலம் இலங்கை தகவல் தொழில்நுட்ப கற்கை நிறுவனம் (Sri Lanka Institute of Information Technology – SLIIT) வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச சாதனை மைற்கல்லொன்றை எட்டியுள்ளது. இந்த சாதனை உலக அரங்கில் இலங்கையின் வணிகக் கல்விக்கு ஒரு தீர்க்கமான தருணத்தைக் குறித்து நிற்பதுடன், வணிக புத்தாக்கம் மற்றும் மூலோபாயத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் மத்தியில் SLIIT கல்வி நிறுவனத்தையும் நிலைநிறுத்தியுள்ளது.
2013ம் ஆண்டில் தொடங்கப்பட்ட IBPC ஆனது உலகெங்கிலும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களை நிஜ உலகில் காணப்படும் வணிக சவால்களைச் சமாளிக்க ஒன்றிணைக்கின்ற உலகளாவிய அங்கீகாரம் பெற்ற ஒரு வருடாந்த போட்டி நிகழ்வாகும். 2025ம் ஆண்டு நிகழ்வில் கடுமையான பல்மட்ட செயல்முறை அடங்கியிருந்தது. இது சர்வதேச அளவில் இணையவழி தகுதிச் சுற்றில் தொடங்கி, 2026 ஜனவரி 26 முதல் 30 வரை தென்கொரியாவில் நடைபெற்ற உலகளாவிய நேரடி இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்தது. ஆசியா, ஐரோப்பா மற்றும் வட,தென் அமெரிக்கா கண்டங்களிலிருந்து பல்கலைக்கழகங்கள் பங்குபற்றி, பட்டப்படிப்பு வணிக துறை சார்ந்த மிகவும் கடினமான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்போட்டியில் போட்டியிட்டன.
இந்த ஆண்டுப் போட்டியானது கொரியாவின் முன்னணி இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாளரான Lake Materials Co., Ltd நிறுவனத்தின் இணைந்து உருவாக்கப்பட்டதுடன், சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாக ஆட்சி (Environmental, Social, and Governance – ESG) கண்ணோட்டத்தில் நிலைபேற்றியல் கொண்ட வளர்ச்சிக்கான விரிவான மூலோபாயத்தை வெளிக்கொண்டு வருமாறு அணிகள் கேட்கப்பட்டிருந்தன. நிறுவனத்தின் மூலோபாய ஸ்தானத்தை பகுப்பாய்வு செய்வதும், உலகளாவிய ESG தராதரங்களுடன் ஒன்றிய, புத்தாக்கமான, நிதியியல் ரீதியாக சாத்தியமான மற்றும் நிலைபேற்றியல் கொண்ட தீர்வுகளை முன்மொழியுமாறு போட்டியின் பங்கேற்பாளர்களுக்கு போட்டி இலக்காக முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்பு பகுப்பாய்வுச் சிறப்பை மாத்திரமல்லாது, நடைமுறைரீதியாக செயல்படுத்துவதற்கான திட்டமிடல் மற்றும் வலுவான நிதியியல் கட்டமைப்பையும் முன்வைக்குமாறு கோரியது.
கடுமையான உலகளாவிய போட்டிக்கு மத்தியில், SLIIT அணி முதல் 10 உலகளாவிய இறுதிப் போட்டியாளர்கள் என்ற ஸ்தானத்திற்கு முன்னேறி, இறுதியில் முதல் இடத்தைப் பிடித்தது. IBPC சர்வதேச வெற்றியாளராக வரலாற்றில் வெற்றிபெற்ற முதல் இலங்கை அணியாகவும் மாறியது. அவர்களின் விளக்கக்காட்சி அதன் பகுப்பாய்வு ஆழம், புத்தாக்கம்மிக்க சிந்தனை, மூலோபாய தெளிவு மற்றும் நம்பிக்கையூட்டும் வணிக முறைமை ஆகியவற்றிற்காக தனித்துவம் பெற்றதுடன், சர்வதேச நடுவர் அணியின் உச்ச அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது.
இந்த வெற்றியாளர் அணிக்கு SLIIT Business School பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹெஷான் சமீர பத்திரணகே அவர்கள் பயிற்சி அளித்திருந்தார். அணியின் இடம்பெற்ற மாணவர்களாக மொஹமத் ஹுஸ்னி ஹுசைன், யுதாரா சுபசிங்க, சுனேரா லனரோல் மற்றும் அத்தப்பத்து முதியான்சலாகே ரஷினி மலீஷா ஆகியோர் அடங்கியிருந்தனர். போட்டி முழுவதும் அவர்கள் மகத்தான மட்டத்தில் குழுப்பணி, ஒழுக்கம் மற்றும் அறிவுசார் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.
IBPC போட்டியின் வரலாற்றில் உலகளவில் 100 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் பங்கேற்பை அது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மைற்கல் வெற்றியானது சர்வதேச அளவில் SLIIT இன் நற்பெயரை மேம்படுத்தியுள்ளது மாத்திரமன்றி, இலங்கையின் உயர்கல்வித் துறைக்கு திருப்புமுனை மிக்க தருணமொன்றையும் குறிக்கிறது. கொரியாவின் புகழ்பெற்ற புத்தாக்க கட்டமைப்பில் உள்ள உயர்மட்ட பல்கலைக்கழகங்களுடன் போட்டியிட்டுள்ள SLIIT அணி, இலங்கை மாணவர்கள் மிக உயர்ந்த அளவில் சர்வதேச மட்டத்தில் போட்டியிட்டு தம்மால் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளது.
அனுபவரீதியான கற்றல், உலகளாவிய அனுபவ வெளிப்பாடு மற்றும் தொழில்துறை சார்ந்த கல்வியறிவு ஆகியவற்றின் மீது SLIIT இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த வெற்றி பிரதிபலிக்கிறது. அதன் வணிகக் கற்கைநெறியில் நிலைபேற்றியல் மற்றும் ESG கட்டமைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம், தான் உருவாக்கும் பட்டதாரிகள் மூலோபாய நுண்ணறிவு மற்றும் பொறுப்புணர்வுமிக்க தலைமைத்துவத்துடன் சமகால உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை இக்கல்வி நிறுவனம் உறுதி செய்து வருகிறது.
இந்த வெற்றியை ஒரு தேசிய சாதனை என்று சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹெஷான் சமீர பத்திரணகே அவர்கள் விபரித்தார். “இந்த வெற்றியானது SLIIT க்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல, இது முழு இலங்கைக்கும் கிடைத்த வெற்றி. பகுப்பாய்வு ரீதியான கடுமை, மூலோபாய தெளிவு மற்றும் உலகளாவிய விழிப்புணர்வு மூலம், உலகின் மிகச் சிறந்த திறமைசாலிகளுடன் நம்மால் போட்டியிட முடியும் என்பதை எங்கள் மாணவர்கள் நிரூபித்துள்ளனர். இந்தப் பயணம் முழுவதும் அவர்கள் வெளிப்படுத்திய ஒழுக்கம், மீள்தன்மை மற்றும் அறிவுசார் முதிர்ச்சி குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.
சர்வதேச மேடையில் போட்டியிடுவது சவாலானது மற்றும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு அனுபவம் என்று கூறிய இவ்வணியின் பிரதிநிதி மொஹமத் ஹுஸ்னி ஹுசைன் அவர்கள் உலகளாவிய அனுபவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். இச்சுற்றுப்போட்டியை வெல்வது அணியின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்றும், இலங்கை மாணவர்கள் சர்வதேச அளவில் புத்தாக்கம் மற்றும் வணிக மூலோபாயத்தில் முன்னிலை வகிக்க முடியும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சாதனையானது நிறுவனரீதியான அங்கீகாரத்திற்கு அப்பால், இலங்கையில் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாகக் காணப்படுவதுடன், அர்ப்பணிப்பு, புத்தாக்கம் மற்றும் கடுமையான கல்வி மூலம் உலகளாவிய மகத்துவத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கிறது. இந்த வரலாற்று சாதனையை SLIIT கொண்டாடும் இவ்வேளையில், இந்த வெற்றியானது உலக அரங்கில் இலங்கை உயர்கல்வியின் வளர்ந்து வரும் தாக்கத்திற்கு சிறந்த சான்றாக உள்ளது.
