சர்வதேச சுற்றுலா மற்றும் உள்ளூர் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக விரிவான தேசிய நிகழ்வு நாட்காட்டியை இலங்கை வெளியிடுகிறது
அண்மையில் கொழும்பு ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலில் இடம்பெற்ற விசேட நிகழ்வில், இலங்கை நிகழ்வு முகாமைத்துவ சங்கமானது (EMA), உத்தியோகபூர்வ இலங்கை நிகழ்வு நாட்காட்டியை (Sri Lanka Event Calendar) வெளியிட்டது. தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டலின் கீழ், நிகழ்வு முகாமைத்துவ ஆலோசனைக் குழுவினால் உருவாக்கப்பட்ட இந்த நாட்காட்டியானது, கலாசார விழாக்கள் முதல் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், உயர்மட்ட கூட்டாண்மை Meetings, Incentives, Conferences, and Exhibitions – MICE (கூட்டங்கள், ஊக்கப்படுத்தல்கள், பயணங்கள், மாநாடுகள், கண்காட்சிகள்) உள்ளிட்ட அனைத்து முக்கிய சர்வதேச மற்றும் உள்ளூர் நிகழ்வுகளுக்கான ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் வழிகாட்டியாகச் செயற்பட வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் கௌரவ சத்துரங்க அபேசிங்க, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். அவர்களின் வருகையானது, நிகழ்வுத் துறையை தேசிய பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவோர் துறையின் ஒரு முக்கிய தூணாக அரசாங்கம் அங்கீகரிப்பதனை எடுத்துக் காட்டியது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் உரையாற்றிய EMA அமைப்பின் தலைவர் சாலிய வீரசேகர, இந்நாளானது தொழில்துறையின் ஒரு வரலாற்று திருப்புமுனை எனப் பாராட்டினார். அவர் இங்கு தெரிவிக்கையில், “ஒருங்கிணைந்த குடும்பமாக பல வருட சவால்களை எதிர்கொண்ட பின்னர், எமது எதிர்காலத்தை மீள்வரையறை செய்யும் இரண்டு முயற்சிகளை அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார். நாட்டின் துடிப்பான கலாசாரத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ இலங்கை நிகழ்வு நாட்காட்டியையும், கல்விசார் கோட்பாடுகளுக்கும் EMA உறுப்பினர் நிறுவனங்களின் நடைமுறைத் துறை அனுபவங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு முதன்மையான தகுதியான ‘நிகழ்வு முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் கற்கைகளுக்கான சர்வதேச டிப்ளோமாவையும் அவர் இங்கு வெளியிட்டு வைத்தார்.
கலாசாரக் கொண்டாட்டம்
இந்நிகழ்வு இடம்பெற்ற மாலைப் பொழுதானது, உயர்மட்டக் கலை நிகழ்ச்சிகளால் அலங்கரிக்கப்பட்டது. இதில் வித்துவான் சன்ன விஜேவர்தனவின் இயக்கத்தில், ரக்கித விக்ரமரத்னவின் இசையமைப்பில், சன்ன-உபுலி கலை அறக்கட்டளை மற்றும் நாட்ரோ (Naadro) குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட கண்டி எசல பெரஹெரவை அடிப்படையாகக் கொண்ட விசேட நடன நிகழ்ச்சி முக்கிய இடம்பிடித்தது. அத்துடன் நாட்ரோ குழுவினரின் பாரம்பரிய ‘தம்மட்டம’ (Thammattama) மேள இசை நிகழ்ச்சியானது, இலங்கையின் செழுமையான கலாசார பாரம்பரியத்தை மேலும் பறைசாற்றியது.
நிகழ்வு முகாமைத்துவ சங்கம் (EMA) பற்றி:
EMA என்பது இலங்கையில் உள்ள நிகழ்வுத் துறை வல்லுநர்களுக்கான முன்னணி தொழில் சங்கம் மற்றும் அது தொடர்பான உச்ச அமைப்பாகும். இது வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், நெறிமுறை ரீதியான தரங்களை பேணுவதற்கும், தேசிய ரீதியில் நிகழ்வு முகாமைத்துவ சமூகத்தின் நலன்களுக்காக முன்னிற்பதற்குமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
