Home Sports & Leisure2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

by CeylonBusiness1
August 2, 2026 11:46 am/**/ 0 comment

இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2026 தொடரின் பிளே-ஓஃப் சுற்றை நெருங்கி உள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்கள் வீரர் கட்டமைப்பில் கடைசி நேர அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. 

அதன்படி, ஜெப்னா கிங்ஸ் அணி ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரானுக்குப் பதிலாக பாகிஸ்தானின் இளம் விக்கெட் காப்பு வீரரான கவாஜா நபாயை ஒப்பந்தம் செய்துள்ளதுடன், அவர் சனிக்கிழமை முதல் அணியுடன் இணைந்து தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடவுள்ளார். 

மறுபுறம், தம்புள்ள சிக்சர்ஸ் அணி ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபஸல்ஹக் ஃபரூக்கிக்கு மாற்றீடு வீரராக பாகிஸ்தானின் முன்னணி சகலதுறை வீரர் இப்திகார் அஹமட்டை ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே, தம்புள்ள சிக்சர்ஸ் அணி, இம்முறை எல்.பி.எல் தொடரில் பிளே-ஓஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் பட்சத்தில் இவர் அணியுடன் இணைவார். இதேவேளை, ஏற்கனவே பிளே-ஓஃப் சுற்றை உறுதிசெய்துள்ள கலம்போ கேப்ஸ் மற்றும் கோல் கெலன்ட்ஸ் அணிகளின் கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

banner

இதற்கிடையில், லீக் சுற்றின் 8 போட்டிகளையும் நிறைவு செய்து புள்ளிகள் பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கும் கெண்டி றோயல்ஸ் அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அஃப்ரிடி தனிப்பட்ட காரணங்களால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளதுடன், இங்கிலாந்து வீரர் மொயின் அலி, ஆப்கானிஸ்தானின் சதிகுல்லா அடல் மற்றும் ஸ்கொட்லாந்தின் பிரண்டன் மெக்முல்லன் ஆகியோரும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

எனினும், இவர்களுக்கான மாற்று வீரர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தம்புள்ள சிக்சர்ஸ் மற்றும் ஜெப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டியின் முடிவை பொறுத்து தான் கெண்டி றோயல்ஸ் அணியின் பிளே ஓஃப் வாய்ப்பு தீர்மானிக்கப்படும். 

இந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ள தம்புள்ள சிக்சர்ஸ் அணி போதிய ரன்-ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் கெண்டி றேயால்ஸ் அணியைப் பின்னுக்குத் தள்ளி பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறும். 

இதேவேளை, இம்முறை எல்.பி.எல் தொடரின் கடைசி 2 லீக் போட்டிகளும் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்; முடிந்ததும், பிளே-ஓஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி என்பன கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

You may also like

Leave a Comment