Home Sports & Leisureசர்வதேச நட்சத்திரங்களை ஈர்க்க தயாராகும் 2026 லங்கா பிறீமியர் லீக்: வீரர்கள் பதிவு மே 20 வரை நீடிப்பு

சர்வதேச நட்சத்திரங்களை ஈர்க்க தயாராகும் 2026 லங்கா பிறீமியர் லீக்: வீரர்கள் பதிவு மே 20 வரை நீடிப்பு

by CeylonBusiness1
May 11, 2026 12:22 pm/**/ 0 comment

 இலங்கையின் முதன்மையான இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரான லங்கா பிறீமியர் லீக் (LPL) தொடரின் 2026 ஆம் ஆண்டு பதிப்பிற்காக, திறமைமிக்க பல முன்னணி சர்வதேச வீரர்களை ஈர்க்க முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் தொடரின் உரிமைகளைத் தன்வசம் வைத்துள்ள ஐ.பி.ஜி. குழுமம் (IPG) ஆகியன நம்பிக்கை வெளியிட்டுள்ளன. 

இதற்கான சர்வதேச வீரர்களின் பதிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இம்முறை நடைபெறவுள்ள தொடருக்காக உலகத்தரம் வாய்ந்த வலுவான சர்வதேச வீரர்கள் குழாமை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா பிறீமியர் லீக் 2026 தொடருக்கான வெளிநாட்டு வீரர்கள் பதிவுக்கான இணையவழிப் பதிவு நடவடிக்கைள் (Online Portal) 2026 மே 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த இணையத்தளம் ஊடாக வீரர்கள் பதிவு செய்வதற்கு எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வெளிநாட்டு வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.srilankacricket.lk ஊடாக இந்த இணையவழிப் பதிவு நடவடிக்கைகளை மேற்;கொள்ள முடியும்.

இந்த வீரர்களுக்கான பதிவுக்காலமானது உலகளாவிய ரீதியில் பல வீரர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பதற்கு ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் கடந்த ஆண்டு 600 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

banner

இந்த நிலையில், இந்த ஆண்டு லங்கா பிறீமியர் லீக் தொடருக்காக, ஐசிசி இன் பூரண அங்கத்துவத்தைப் பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் இணைந்து ஐசிசி இன் இணை உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்களையும் உள்வாங்குவதன் மூலம் சர்வதேச வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பதை மேலும் விரிவுபடுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஜிம்பாப்வே, நேபாளம், அமெரிக்கா, ஓமான், இத்தாலி, நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த திறமைமிக்க வீரர்களை ஈர்ப்பதற்கும் இம்முறை விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லங்கா பிறீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமன்;த தொடங்வெல கருத்து தெரிவிக்கையில், “லங்கா பிறீமியர் லீக் தொடரின் 6 ஆவது பருவத்தில் விளையாடுவதற்கு, கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் காட்டி வரும் ஆர்வம் குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதேபோல, வெளிநாட்டு வீரர்களிடமிருந்து கிடைக்கும் இந்த அமோக வரவேற்பானது, சர்வதேச அளவில் லங்கா பிறீமியர் லீக் தொடரின் வளர்ச்சியையும், புகழையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.” என தெரிவித்தார்.

இத்தொடரின் போட்டித்தன்மை மற்றும் சர்வதேச ரீதியிலான ஈர்ப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு அணியும் தலா இரண்டு சர்வதேச நட்சத்திர வீரர்களையும் (International Marquee Players), இரண்டு இலங்கை நட்சத்திர வீரர்களையும் உள்வாங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். இதனிடையே, இந்த ஆண்டு லங்கா பிறீமியர் லீக் தொடருக்காக முன்கூட்டியே ஒப்பந்தம் செய்யப்பட்ட (Pre-signed) வீரர்களின் விபரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும். 

லங்கா பிறீமியர் லீக் தொடரின் ஆறாவது அத்தியாயம் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம், கொழும்பு ஆர் பிரேமதாச மைதானம், கண்டி பல்லேகல மற்றும் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், ஐ.பி.ஜி குழுமமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 6ஆவது லங்கா பிறீமியர் தொடர். 2026 ஜூலை 10 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 05 ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச வீரர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதன்மையான இருபதுக்கு-20 லீக் தொடராக விளங்கும் லங்கா பிறீமியர் லீக் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் நான்கு அத்தியாயங்களில் ஜப்னா கிங்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்று வெற்றிகரமான அணியாக வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment