Home Financeமத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பணத்தை அனுப்பும் வசதிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் DFCC வங்கி மற்றும் AlfaNow இடையிலான கூட்டாண்மை  

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பணத்தை அனுப்பும் வசதிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் DFCC வங்கி மற்றும் AlfaNow இடையிலான கூட்டாண்மை  

by CeylonBusiness1
May 21, 2026 11:25 am/**/ 0 comment

வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கை மக்கள் தாயகத்திற்கு பணத்தை அனுப்பிவைக்கின்ற வழிமுறைகளை மேம்படுத்தும் பொருட்டு, டுபாயிலுள்ள AlfaNow உடன் கூட்டாண்மையொன்றை DFCC வங்கி ஏற்படுத்தியுள்ளது.  மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பணத்தை அனுப்பி வைப்பதற்கான தனது வலையமைப்பினை இதன் மூலமாக இவ்வங்கி மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

அந்நியச் செலாவணி வருமானமானது இலங்கையில் நிதியியல் ரீதியாக முக்கியமான உயிர்நாடிகளில் ஒன்றாகக் காணப்படும் நிலையில், இந்த ஒத்துழைப்பு அதனை மேலும் வலுப்படுத்த உதவும். இலங்கையில் எத்தனையோ குடும்பங்களை எடுத்துக்கொண்டால், வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்படும் பணத்தை வெறுமனே ஒரு பரிவர்த்தனை என்ற வட்டத்திற்குள் மட்டுப்படுத்தி விட முடியாது. அது அவர்களின் அன்றாடச் செலவுகள், கல்வி, மற்றும் நீண்ட கால உறுதிப்பாடு ஆகியவற்றுக்கு உதவுகின்ற அடிப்படை வருமானமாகக் காணப்படுகின்றன.  

குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள வாடிக்கையாளர்கள் விரைவாகவும், இன்னும் கூடுதலான அளவில் பாதுகாப்பாகவும், மற்றும் இலகுவில் சென்று அனுப்பக்கூடியதாகவும் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் ஆற்றலை AlfaNow உடன் ஒத்துழைப்பதன் மூலமாக DFCC வங்கி மேம்படுத்தியுள்ளது. பணத்தை அனுப்பி வைப்பதற்கு எடுக்கின்ற நேரம் மற்றும் நம்பிக்கையாக அதனை அனுப்பி வைத்தல் ஆகியவற்றை இக்கூட்டாண்மை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தாயகத்திலுள்ள தமது குடும்பங்களுக்கு பணத்தை இலகுவாக அனுப்பி வைப்பதற்கும் இது வழிவகுக்கும்.      

AlfaNow நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி ஹசன் ஜாபர் மற்றும் DFCC வங்கியின் வெளிநாட்டு வங்கிச்சேவை, பணப்பரிமாற்றம் மற்றும் வணிக மேம்பாடு ஆகிய செயல்பாடுகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைவர் அன்டன் ஆறுமுகம் ஆகியோர் இக்கூட்டாண்மை தொடர்பான ஆவணத்தை உத்தியோகபூர்வமாக நிறைவேற்றியுள்ளனர்.

banner

அன்டன் ஆறுமுகம் அவர்கள் இக்கூட்டாண்மை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பப்பட்டு வருகின்ற முக்கிய பிராந்தியமொன்றில் எமது இருப்பினை வலுப்படுத்துவது, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தாயகத்திலுள்ள தமது குடும்பங்களுக்கு உதவுவதை மேலும் இலகுவாக்க வழிவகுக்கின்றது. அனைத்துப் பணப்பரிமாற்றங்களையும் விரைவாகவும், பாதுகாப்பாகவும், மற்றும் நம்பிக்கை மிக்க வழியிலும் அனுப்பி வைப்பதை உறுதி செய்வதே எமது நோக்கம். குறிப்பாக இந்த பணத்தை நம்பியிருப்பவர்களைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதொரு காலகட்டமாக தற்போதைய சூழ்நிலை மாறியுள்ள நிலையில், இந்த கூட்டாண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.” 

இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுகின்ற பணத்தைப் பொறுத்தவரையில், மத்திய கிழக்குப் பிராந்தியம் தொடர்ந்தும் கணிசமான பங்கினைக் கொண்டுள்ளது. எனவே, அதனை நம்பிக்கையுடனும், இலகுவாகவும் அனுப்பி வைப்பதற்கான வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். இத்தகைய கூட்டாண்மைகள் மூலமாக வெளிநாடுகளில் தனது ஆற்றலை DFCC தொடர்ந்தும் வலுப்படுத்தி வருவதுடன், வெளிநாடுகளில் தொழில்புரிந்து வருகின்ற இலங்கையர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு உதவுகின்றது. 

You may also like

Leave a Comment